மத்திய அரசுக்கு வாட்ஸ்அப்பில் பதில்!
Posted on 21/01/2021
வாட்ஸ்அப் புது பிரைவசி பாலிசியை அமலாக்கும் நடைமுறையை மறு பரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் எழுதி இருந்தது. அதன்படி மத்திய அரசு விடுத்த கோரிக்கைக்கு வாட்ஸ்அப் பதில் அளித்துள்ளது.
இது குறித்து வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, “புது அப்டேட் பேஸ்புக்குடன் தரவுகளை பகிர்வது தொடர்பாக எந்த வசதியையும் வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். எங்களின் நோக்கம் வியாபாரங்கள், தங்களது வாடிக்கையாளர்கள் சிறப்பான சேவையை வழங்கி வளர்ச்சி பெறுவதற்கான வசதியை வழங்குவது தான்.”
“வாட்ஸ்அப் எப்போதும் தனிப்பட்ட குறுந்தகவல்களை முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கும். இதனால் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் அவற்றை பார்க்க முடியாது. தவறான தகவல் பரவுவதை சரி செய்யவும், எந்த விதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்க நாங்கள் எப்போதும் காத்திருக்கிறோம்,” என அவர் தெரிவித்து இருக்கிறார்.