பிரதமர் மோடி சவுரி சவுரா நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைக்கிறார்!
Posted on 04/02/2021
இந்திய சுதந்திர போராட்டத்தில் சவுரி சவுரா சம்பவம் திருப்புமுனை ஏற்படுத்தியதில் பெரும் பங்கு வகிக்கிறது. வர்த்தகம் செய்ய இந்தியா வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, பிரித்து ஆளும் சூழ்ச்சியை கொண்டு பல்வேறு சிறு, குறு நில மன்னர்களை சிறை பிடித்தும், கப்பம் கட்ட சொல்லியும் வற்புறுத்தின.
அவர்கள், தங்களுக்கு கட்டுப்பட்டவர்களுடன் இணக்கமுடனும், அத்துமீறியவர்களை அடக்கும் முறையில் கைதேர்ந்தவர்களாகவும் இருந்தனர். ஆங்கிலேய அரசு இந்தியாவில் ஆட்சி செய்து பல சட்டங்களை இயற்றியது. அவற்றில் ரவுலத் சட்டமும் ஒன்று.
இந்தியர்களை நசுக்கும் அதிகாரம் படைத்த இச்சட்டத்திற்கு எதிராக கடந்த 1922ம் ஆண்டு பிப்ரவரி 4ந்தேதி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வன்முறையற்ற, அமைதி வழியிலான அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகருக்கு உட்பட்ட சவுரி சவுரா பகுதியில் நடந்த பிரிட்டிஷாருக்கு எதிரான இந்த ஒத்துழையாமை இயக்கத்தில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
அமைதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலியானதில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அதற்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் 23 போலீசார் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலால் ஆங்கிலேய அரசாட்சியின் அடித்தளம் அசைந்தது. சுதந்திர போராட்ட எழுச்சிக்கு இந்த சம்பவம் ஒரு முக்கிய பங்கு வகித்தது. இதன்பின் 228 இந்தியர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அவர்களில் 172 பேர் பிரிட்டிஷாரால் தூக்கில் போடப்பட்டனர்.
சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த 1982ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் ஷாகீத் ஸ்மராக் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் 11 ஆண்டுகள் கழித்து கடந்த 1993ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையில் நினைவகம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இதன் நூற்றாண்டு விழா சிறப்புடன் கொண்டாடப்படும் என உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார். நாட்டின் இளம் தலைமுறையினரின் எண்ணத்தில் தேசப்பற்று உணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக ஓராண்டிற்கு இந்த விழாவை கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது.
இதனை முன்னிட்டு உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகரில் சவுரி சவுரா நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கான தொடக்க விழா நடைபெற உள்ளது. அதற்கான விழாவை பிரதமர் மோடி இன்று அதாவது பிப்ரவரி, 4-ம் தேதி காலை 11 மணியளவில் காணொலி காட்சி வழியே தொடங்கி வைக்க இருக்கிறார்.