பிரளயத்திலிருந்து காக்கும் பிரளயநாதர் சுவாமி
Posted on 07/12/2020
Youtube Video - youtu.be/M-POLMiLihw
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் சிற்றூரைச் சுற்றி வைகைக் கரையோரங்களில் அமைந்திருக்கும் பழைமைப் புகழ்மிக்க ஆதிகால ஆலயங்கள் மூன்றினைப் பற்றி அரிய தகவல்களுடன் வீடியோவை "iKeyBoss YouTube Channel” - க்கு சோழவந்தான் திரு. லோக பால கார்த்திகேயன் மற்றும் அவரது குழுவினர் அனுப்பி வைத்தனர்.
பிரளயத்திலிருந்து மக்களைக் காத்த பிரளயநாதசுவாமி ஆலயம்!
சோழவந்தான் சிற்றூருக்கு அருகில் வைகை கரையோரத்தில் உள்ள இந்த ஆலயம் சுமார் 800 வருடங்களுக்கு முற்பட்டதாகும். இது பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகும். ஒரு சமயம் இந்த ஆலயத்தையும், ஊர் மக்களையும் பிரளய வெள்ளத்திலிருந்து காத்ததால் இந்த ஆலய பிரதான தெய்வத்திற்கு பிரளயநாத சுவாமி என்ற பெயர் வரலாயிற்று. இங்குள்ள சனீஸ்வரர் லிங்க ரூபத்தில் காட்சி தருகின்றார். இந்த ஆலயத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றார்கள். சோழவந்தான் வைகையாற்றில் தென் கரையில் தென் கரை என்னும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது தான் தென் கரை ஸ்ரீ மூலநாதசுவாமி ஆலயம். 900 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தின் மூலவரை திருமூல மகரிஷி பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறுகள் தெரிவிக்கின்றன. இக்கோயிலின் மூலவரை ஸ்ரீ மூலநாத உடையார் என்றும் அழைக்கின்றார்கள். இந்த ஆலயத்திற்கு அகிலாண்டேஸ்வரி ஆலயம், ஆதி சிதம்பரேஸ்வரர் ஆலயம், வில்வணேஸ்வரர் ஆலயம் ஆகிய பெயர்களும் விளங்குகின்றன. இந்த ஆலயத்திற்கு அகத்திய மகா முனிவர் வந்து வழிபட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகின்றது. பராக்ரம பாண்டியனால் கட்டப்பட்ட இவ்வாலயத்தின் சொர்ணபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடினால் சரும நோய்கள் குணமடையும் என நம்பப்படுகின்றது. வைகைக் கரையில் அமைந்துள்ள மற்றுமொரு பழைமையான ஆலயம் ஜனகை மாரியம்மன் ஆலயம், இவ்வாலயத்தின் சுவர் சிற்பங்கள் கண்களை கவரும் விதமாக உள்ளன. மதுரையில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு வழங்கப்படுகின்ற முக்கியத்துவம், ஜனகை மாரியம்மன் ஆலயத்திற்கும் வழங்கப்படுகின்றது. இங்கு வருடாந்திர திருவிழாக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சோழவந்தானின் வைகைக் கரையில் அமைந்துள்ள மற்றுமொரு பிரசித்தி பெற்ற ஆலயம், ஜனகை நாராயணப் பெருமாள் ஆலயம். இது சுமார் 1600 வருடங்கள் பழமைமிக்கதாகும். இது சுந்தரபாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாகும். இங்கு 700 ஆண்டுகளுக்கு முந்திய குதிரை வாகனம் இன்னமும் உள்ளது. இங்கு பழைமைமிக்க வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் அதிகம் உள்ளன. ராஜராஜ சோழன் இவ்வாலயத்திற்கு திருப்பணிகள் செய்ததாகச் சொல்லப்படுகின்றது. இவ்வாலயத்தில் அற்புதமான கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. இது போன்ற சுவாரசியமான வீடியோக்களை நீங்களும் அனுப்பி வைக்கலாமே!