படப்பிடிப்புடன் தொடங்கிய 'கலியுகம்'
Posted on 20/01/2021
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கும் 'கலியுகம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
அறிமுக இயக்குனர் பிரமோத் சுந்தர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'கலியுகம்'. இந்தப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கிறார். புதுமுக ஒளிப்பதிவாளர் ராம்சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,' எதிர்காலத்தில் நடைபெற சாத்தியமுள்ள புதுமையான கதை களத்தில் 'கலியுகம்' அமைந்திருக்கிறது. இந்திய திரைப்படத்துறையில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத புதிய உத்தியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் ஐந்து பிரம்மாண்டமான அரங்குகளை வடிவமைத்து படப்பிடிப்பு நடத்துகிறோம். ஹாரர் திரில்லர் ஜெனரல் தயாராகும் இத்திரைப்படத்திற்கு நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கிறார்.' என்றார்.
தமிழ் கன்னடம் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த கலியுகம் படத்தை ப்ரைம் சினிமாஸ் உரிமையாளர் கே எஸ் ராமகிருஷ்ணா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.