இனிவரும் காலம் இளைஞர்களின் காலம்!
Posted on 22/08/2017
நாம் அனைவரும் ஒன்றிணையும் போதுதான் சமுதாயம் உருவாகிறது. ஒரு வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டுமெனில் அதற்கான செயலில் நாம் நம்மை முன்னிலைப்படுத்த வேண்டும். இன்று பல்வேறு சமூக சூழ்நிலைகளிலும், சமுதாய அக்கறைகளிலும் இளைஞர்கள் அதிக முனைப்போடும் ஈடுபாட்டோடும் செயல்படுகிறார்கள். இது நிச்சயம் வரும் கால இளைஞர்களின் காலமென நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது. அப்படித்தான் சமீபத்தில் அண்ணாநகர் பகுதியை கடக்கும்போது ஒரு சில யுவன் யுவதிகள் அதிக முனைப்போடு குழந்தைகள் பார்க்கை சீரமைத்துக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு மேலாக அவர்களை கண்ட நான் அவர்களிடம் பேசினேன்.
தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பி.ஆர்க் படிப்பினை சார்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்களான அவர்கள் NASA (National Association of Students of Architecture) என்னும் ஒரு அமைப்பின் அங்கத்தினர்கள். NASA என்பது தெற்கு ஆசிய கன்டத்தில் உள்ள ஆர்க்கிடெக்ஷர் மாணவர்கள் இணைந்திருக்கும் ஒரு அமைப்பாகும். அந்த அமைப்பு மாணவர்களுக்கு கல்வி சார்ந்தும் சமுதாயம் சார்ந்தும் ஒரு சில ப்ராஜெக்ட்ஸ் கொடுப்பதுண்டு. அதில் இவ்வாண்டு, நகர் பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் ஒரு இடத்தை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்றவேண்டுமென்பதே. கேட்க கேட்க சுவாரசியம் கூட, இன்னும் இதைப்பற்றி அறிய. இந்த இளம் குழுவை வழிநடத்துபவர்களான மரிய சுவிக்ஷா மற்றும் சாம் வில்லியம்ஸிடம் உரையாடினோன்.
‘முதலில் நாங்கள் யாருமே மதுரையைச் சார்ந்தவர்கள் அல்ல.. சொல்லப்போனால் எங்களுக்கு அவ்வளவாக மதுரை பரீட்சியம் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் NASA அமைப்பிலிருந்து ஒரு சில ப்ராஜெக்ட்ஸ் வழக்கப்படும். அதை சரியாக செய்பவர்களுக்கு சில பாயிண்ட்ஸ் அளிக்கப்படும். பாயிண்ட்ஸ்களை ஷீட்ஸ்களில் ப்ராஜெக்ட்களாக உட்கார்ந்தும் செய்யலாம், களத்திலும் இறங்கலாம். களத்தில் வெற்றி காணவேண்டுமென்பதே எங்களின் இலட்சியமாக இருந்தது. எனவே, மதுரையில் முக்கியமான நகர் பகுதியாக இருக்கும் இடங்களை ஆராய்ந்தோம்.
அதில் இறுதியில் அண்ணாநகரில் உள்ள ஒரு குழந்தைகள் பூங்காவை தேர்வு செய்தோம். நகரின் பிரதான சாலையில் அப்பூங்கா அமைக்கப்பட்டிருந்த போதிலும் சரியான கவனிப்பு இல்லாமல் இருந்தது. எனவே, அப்பூங்காவைப் பற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டபொழுது:
‘முன்பு இப்பகுதியில் அதிகமான குழந்தைகள் இருந்துவந்தனர். பின் காலப்போக்கில் அவர்கள் வளர்ந்து இவ்விடத்தை விட்டு இடம் பெயர்ந்தனர். அதன்பின் இப்பூங்காவை யாரும் அவ்வளவாக பயன்படுத்தவில்லை. தற்போது இரவு நேரங்கள் சிறுவர்கள் சிலர், தவறான செயல்பாடுகளுக்காக இப்பூங்காவை பயன்படுத்துகிறார்கள். சுற்றி வயது முதிர்ந்தவர்கள் இருப்பதால் அவர்களை சென்று கேட்கவும் அச்சப்படுகிறார்கள்’ என கூறினார்கள்.
அதன்பின், நாங்கள் நடத்திய ஆய்வில் அங்கு அதிகமாக வயதானோர் இருப்பதை கண்டோம். எனவே, அப்பூங்காவை பெரியவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்ற திட்டமிட்டு, முதலில் அப்பூங்காவில் உள்ள சுவரின் தோற்றத்தை மாற்ற திட்டமிட்டோம். அதில் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஃபிட்னஸ் தொடர்பான படங்களை வரைந்தோம். இன்று உடலில் பிரச்சனைகள் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பது சரியான உடற்பயிற்சி இல்லாதது தான். எனவே, அவர்களுக்காக 8 வடிவத்தில் உள்ள அக்குபஞ்சர் ட்ராக் ஒன்றை உருவாக்கியுள்ளோம். அதன் பின் அங்கு சுற்றியுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நாங்கள் சென்று அவர்களின் தேவை என்ன என்பதை கேட்டு அதன்படி பார்க்கை வடிவமைத்தோம். அதில் பலரும் ஷட்டில் விளையாட ஆர்வம் காட்டினர். எனவே, அங்கு ஒரு ஷட்டில் கோர்ட் ஒன்றை உருவாக்கினோம். மக்களை தினமும் காலையில், வந்து விளையாட அழைப்பு விடுத்தோம். தற்போது இதன் பணிகள் அனைத்தும் முடிந்து ஆகஸ்ட் 15ம் தேதி எல்லோரையும் இவ்விடத்திற்கு வரவழைத்து இவ்விடத்தை அவர்களின் முழு பயன்பாட்டிற்கு கொடுத்துவிட்டோம்.
எங்களின் இப்பணிக்கு கல்லூரியில் எந்த ஒரு சிறப்பு விடுப்போ அல்லது பணமோ அளிக்கப்படமாட்டாது. எங்களின் முழு விருப்பத்துடனும் எங்களால் இயன்ற பணத்தினைக் கொண்டும் இவ்வேலையை செய்கிறோம். எங்களைப் பொருத்தவரை எங்களை வளர்த்த இந்த சமூகத்திற்கு எங்களால் இயன்ற ஒன்றை செய்துள்ளோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இக்குழுவில் எங்களோடு வசந்த், ஜமீலா நோஃபா, ஸ்ரீநிதி, புவனேஷ்வரி, சூர்யா, தினேஷ், ஆகாஷ், முகுந்த், ஜெயவர்ஷினி, ஆர்த்தி பிரியா, ராகுல் அவர்களோடு எங்கள் ஜூனியர்கள் அனு, ஸ்ரீநிதி, ஸ்ரீகார்த்திகா உள்ளனர்.’ என கூறினர்.
Tags: News, Madurai News, Lifestyle, Art and Culture