பானிபூரி சாப்பிட்டால் காலரா பரவுமா? நேபாளத்தில் விதிக்கப்பட்ட தடையின் பின்னனி
Posted on 29/06/2022
நேபாளம் நாட்டில் பானி பூரி தண்ணீரால் காலரா பரவி வருவதாக கூறி தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி உணவும் நொருக்கு தீனி வகையாக பானி பூரி விளங்கி வருகிறது.
வட இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகையான இது, தமிழ்நாட்டிற்கும் வட இந்தியர்களோடு சேர்ந்து வந்துவிட்டது.
தொடக்கத்தில் நகரங்களில் மட்டுமே இருந்த பானிபூரி தற்போது கிராமங்கள் மூளை முடுக்குகளிலும் எளிதில் கிடைக்கிறது. வட இந்திய உணவு என்று ஒதுக்காமல் அதன் சுவை காரணமாக சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் பானி பூரியை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். அவ்வப்போது பானி பூரிக்கு எதிராக உடல்நலம் சார்ந்து வாட்ஸ் அப்பில் பதிவுகள் பகிரப்பட்டாலும் அதை படித்துக்கொண்டே மறு நொடி பானி பூரி சாப்பிடுபவர்களாக மக்கள் மாறிவிட்டனர்.
இந்த நிலையில், நேபாளம் தலைநகர் காத்மாண்டு சுற்றுவட்டார பகுதிகளில் காலரா நோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக உதய்பூர் சுற்றுவட்டாரத்தில் காலரா நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. கடந்த 19 ஆம் தேதி ஒருவருக்கு காலரா நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 12 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் பானி பூரிக்கு அசுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் காலரா நோய் பரவியுள்ளதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பானி பூரி விற்பனைக்கு ஒருவாரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு உணவு பிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காத்மாண்டு சுற்றுவட்டாரத்தில் ஏராளமானோர் பானிபூரி கடை நடத்தி வரும் நிலையில், இந்த தடையால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வியாபாரிகளும் உணவு பிரியர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். சுகாதாரமான தண்ணீரை பயன்படுத்த உத்தரவிடுவதை விடுத்து பானிபூரிக்கு தடை விதிப்பது முறையா என அவர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Tags: News