சூர்யாவின் தயாரிப்பில் இணையும் மூன்று தலைமுறை நடிகர்கள்
Posted on 07/02/2021
நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய், அவரது மகன் அர்ணவ் விஜய் என ஒரே குடும்பத்தில் உள்ள மூன்று தலைமுறை நடிகர்கள் ஒன்றிணைந்து நடிக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் சரவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் அருண் விஜய்யும், அவரது மகன் அர்ணவ் விஜயும் இணைந்து நடித்து வருகிறார்கள். ஊட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெறும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் சரவ் சண்முகம் மூத்த நடிகர் விஜயகுமாரை அணுகி நடிக்க கேட்டுக்கொண்டுள்ளார். கதையைக் கேட்ட அவரும் சம்மதம் தெரிவிக்க, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் ஒன்றிணைந்து நடிக்கும் படமாக, அப்படம் மாறியிருக்கிறது. விஜயகுமார்- அருண் விஜய்- அர்ணவ் விஜய் இணையும் இந்தப் படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
இதனிடையே இதற்கு முன் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 'மனம்' என்னும் படத்தில் நாகேஸ்வரராவ்- நாகார்ஜுனா - நாக சைதன்யா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்திருந்தார்கள் என்பதும், தமிழ் திரை உலகில் இது முதல் முயற்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.