உதவி இயக்குனரை கரம்பிடித்த நடிகை 'கயல்' ஆனந்தி
Posted on 07/01/2021
நடிகை 'கயல்' ஆனந்திக்கும், திரைப்பட உதவி இயக்குனர் சாக்ரடீஸ் என்பவருக்கும் எளிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
'பொறியாளன்' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. அதனைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'கயல்' என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். தொடர்ந்து 'சண்டிவீரன்', 'திரிஷா இல்லனா நயன்தாரா', 'விசாரணை', 'பரியேறும் பெருமாள்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது சாந்தனு நடிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தயாராகி வரும் 'ராவண கூட்டம்' என்ற படத்திலும், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன் 'மூடர் கூடம்' புகழ் இயக்குனர் நவீன், கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'அலாவுதீனின் அற்புத கேமரா' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் பணியாற்றிய போது இயக்குனர் நவீனின் உறவினரும், அப்படத்தின் உதவி இயக்குனருமான சாக்ரட்டீஸ் என்பவருடன் நடிகை ஆனந்திக்கு காதல் மலர்ந்தது. உதவி இயக்குனர் சாக்ரடீஸ், நவீன் இயக்கத்தில் வளர்ந்து வரும் 'அக்னி சிறகுகள்' என்ற படத்திலும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் உதவி இயக்குனர் சாக்ரடீஸுக்கும், நடிகை ஆனந்திக்கும் நேற்று தெலுங்கானா மாநிலம் வாரங்கல் என்ற இடத்தில் குறைவான குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனை திருமணத்தில் பங்குபற்றிய தயாரிப்பாளர்கள் ஜேஎஸ்கே சதீஷ்குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகியோர் திருமண புகைப்படத்தை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
நடிகை ஆனந்தி திடீரென்று உதவி இயக்குனர் ஒருவரை கரம் பிடித்துள்ளது அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் திருமணம் செய்து கொண்டிருப்பது அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.