கானா பாடல் அல்பமாக உருவாகியிருக்கும் 'பாரிஸ் ஜெயராஜ்'
Posted on 09/02/2021
இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'பாரிஸ் ஜெயராஜ்' திரைப்படத்தின் பாடல்கள் கானா அல்பமாக உருவாகி இருக்கிறது.
சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஏ 1' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பாரிஸ் ஜெயராஜ்'. இதில் 'சட்டயரிங் ஸ்டார்' சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அனைகா சோட்டி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், பிரித்விராஜ், நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.
படத்தைப் பற்றி நடிகர் சந்தானம் பேசுகையில்,' இயக்குனர் ஜான்சனுடன் இணைந்து பணியாற்றிய 'A1' என்ற படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதே கூட்டணியில் மீண்டும் காமெடி கலந்த கொமர்ஷல் என்டர்டைன்மெண்ட் படைப்பாக 'பாரிஸ் ஜெயராஜ்' உருவாகியிருக்கிறது. இப்படத்திற்காக இயக்குனர் தன் குழுவுடன் இணைந்து யூனிக்கான கொமடி காட்சிகளை உருவாக்கி ரசிகர்களை மகிழ வைத்திருக்கிறார். படத்தில் நான் கானா பாடல் பாடும் பாடகராக நடிக்கிறேன். ஏ1 என்ற படத்தின் வெற்றிக்கு இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை ஒரு காரணம் என்பதால், இந்தப் படத்திற்கும் அவரே இசை அமைத்திருக்கிறார். அவர் கானா பாடல் என்றதும் பாடலாசிரியர் ராகேஷ் தவிர புது புது கானா பாடல்கள் எழுதும் இளைஞர்களுடன் இணைந்து கானா அல்பமாக இந்த படத்தின் பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.' என்றார்.