தமிழிசையின் கிண்டலுக்கு பதிலடி கொடுத்த கமல்!
Posted on 07/11/2017
அரசியல், ஆட்சி அதிகாரம் குறித்து கனவு காண்கிறார் என்று தன்னை விமர்சித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். சினிமா துறையில் தடம் பதித்த கமல்ஹாசன் தற்போது அரசியலிலும் தடம் பதிக்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை செய்த வண்ணம் உள்ளார். இதனிடையே மக்கள் பிரச்சினைகளையும் தற்போது களத்துக்கு சென்று ஆராய்ந்து வருகிறார். கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளால் வடசென்னைக்கு ஆபத்து என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் கமல் குரல் எழுப்பியதோடு மட்டுமல்லாமல் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு விவசாயிகளை நடிகர் கமல் சந்தித்து பேசினார். அப்போது கமல் கூறுகையில் ஏரி, குளங்களை தூர்வார 5 லட்சம் பேரை அனுப்புவதாகவும் அவர்களிடம் விவசாயிகள் தங்கள் குறைகளை கூறினால் உதவுவதாகவும் கமல் தெரிவித்தார். மக்கள் பிரச்சினையை கையிலெடுத்த கமல் தற்போது நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் பிரச்சினையிலும் தலையிட்டு மனதை கொள்ளை கொண்டுவிட்டார்.
இதையடுத்து ரசிகர்களுடன் கமல் சந்தித்து பேசினார். அப்போது கொற்கையில் சுனாமி வந்ததால் பாண்டியர் தலைநகர் மதுரைக்கு போனது. வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். எப்போதும் அழிவு வரும்வரை காத்திருக்க வேண்டியது இல்லை. 35 ஆண்டுகால உழைப்பு காணாமல் போய்விட்டதாக கருதுகிறேன் என்றார்.
ரசிகர்களுடனான சந்திப்பின் போது கமல் பேசுகையில் விரைவில் தனிக்கட்சியை ஆரம்பிக்க போகிறேன். அதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார். இதற்கு தனியார் தொலைகாட்சி சேனலுக்கு தமிழிசை அளித்த பேட்டியில், அரசியல் கட்சி தொடங்கட்டும். களத்தில் குதிக்கட்டும். மக்கள் யார் பக்கம் என்பதை பார்ப்போம். அவர் ஏதோ கனவு காண்கிறார் என்று விமர்சித்திருந்தார்.
தனது பிறந்தநாளான இன்று ஆவடியில் மருத்துவ முகாமை கமல் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், நான் ஏதோ கனவு காண்கிறேன் என்று சிலர் விமர்சிக்கின்றனர். கனவுகளிலிருந்துதான் பல கண்டுபிடிப்புகள் உருவாகின. காணும் கனவுகளை நிஜமாக மாற்ற நாங்கள் பாடுபடுவோம் என்றார். பெயரை கூறாவிட்டாலும் இது தமிழிசைக்கு கொடுத்த பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
Tags: News, Hero, Star