தீவிரமடையும் வடகிழக்குப் பருவ மழை
Posted on 03/12/2016
சென்னை: தமிழகத்தை மிரட்டிய நாடா புயல் வலுவிழந்து வெள்ளிக்கிழமை அதிகாலை காரைக்கால் அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மிதமான முதல் கன மழை பெய்தது. சென்னையில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மயிலாப்பூர், வடபழனி, பட்டினப்பாக்கம், ராமாபுரம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் சாரல் மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. மாலை 4 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை இரவு 7 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மாற்று அதன் சுற்று வட்டாரங்களில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது. சுமார் அரைமணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கடுத்து ஓடியது.
அதே போல் மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இரவு மழை அதிகாலை வரை நீடித்தது. மேலும் மதுரை மாவட்டம் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், திண்டுக்கல், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், விழுப்புரம், சிவகங்கை, திருச்சி, வேலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், கோவை, கிருஷ்ணகிரி, தேனி, தருமபுரி, நாமக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
தெற்கு அந்தமான் கடற்பரப்பில் மேல அடுக்கில் உருவாகியுள்ள காற்றுச் சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்த மேல அடுக்கு சுழற்சி வரும் நாட்களில் புதிய காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: News