டாஸ்மாக்கின் மாற்று வழியா இளநீர்?
Posted on 11/05/2017
தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் புதிய மதுக்கடைகளை நகரங்களுக்கு நடுவிலும் கிராமங்களிலும் உருவாக்கிட டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரம் வரையுள்ள மதுக்கடைகளை அகற்றச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள 5672 டாஸ்மாக் கடைகளில் நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த 3321 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனை சரிக்கட்டும் விதமாக நகருக்குள்ளும், கிராமங்களுக்குள்ளும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவிருந்தன. அதனை கண்டித்து பல பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டும், கைது செய்யப்பட்டும் வந்தனர்.
இந்நிலையில் மதுக்கடை கூடாது என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடங்களில் மதுக்கடை திறக்க கூடாது என்றும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அமைதியாக போராட்டம் நடத்தினால் போலீஸ் தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதனால் தமிழக அரசின் வருமானம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் கேரளாவைப் போலவே தமிழகத்திலும் கள்ளுக்கடை திறக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும் கள்ளுக்கடை திறப்பதன் மூலம் கொங்கு மண்டல தென்னை விவசாயிகளின் ஆதரவையும் பெற முடியும் என தமிழக அரசு கருதுகிறது.
இதனால் இளநீரிலிருந்து பீர் தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழக அரசே துவங்க திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை தமிழக அரசே நடத்துவதா அல்லது தனியார் நிறுவனத்திடம் கொடுப்பதா என்கிற கேள்விகளுடன் இருக்கிறதாம் கோட்டை வட்டாரம்.
Tags: News, Lifestyle