அமெரிக்காவில் முதலாவது கொரோனா தடுப்பூசி!
Posted on 16/12/2020
அமெரிக்காவில், பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. நியூயார்க் நகரைச் சேர்ந்த சான்ட்ராலின்ஸ்சே என்ற நர்ஸ்க்கு முதலாவது கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இந்தத் தடுப்பூசி அமெரிக்க நேரப்படி, காலை 9.30 மணிக்கு போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் பேசிய, நர்ஸ் சான்ட்ராலின்ஸ்சே, பிற தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதைப் போலவே இதுவும் இருந்ததாகவும், எந்த வேறுபாட்டையும் ஊசி போட்டுக்கொள்ளும்போது உணரவில்லை. எனவும் இப்போது தான் நிம்மதியாக உணர்வதாகவும் கூறினார்.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் 1 கோடியே 40 லட்சம் டோஸ்கள் வினியோகிக்க திட்டமிட்டிருப்பதாக தடுப்பூசி திட்டத்தின் தலைமை ஆலோசகர் மான்செப் ஸ்லாக்கி தெரிவித்தார். 2021 ஜனவரி மாதத்தில், 5 கோடி முதல் 10 கோடி டோஸ்வரையும், பிப்ரவரி மாதம் அதே எண்ணிக்கையிலும் தடுப்பூசி வினியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.