கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை!
Posted on 18/12/2020
நீண்ட முயற்சிக்கு பிறகு கொரோனாவுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு 2022ஆம் ஆண்டு வரை தடுப்பூசி கிடைக்காது என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பணக்கார நாடுகளுக்கு வெறும் 14 விழுக்காடு பங்கு மட்டுமே இருக்கிறது. ஆனால், அடுத்த ஆண்டின் ஒட்டுமொத்தமாக உற்பத்தியாகவுள்ள தடுப்பூசிகளில் பாதியை பணக்கார நாடுகள் ஏற்கெனவே ஆர்டர் செய்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், தடுப்பூசி கிடைப்பதில் ஏழை நாடுகள் பின்னுக்கு தள்ளப்படும் என அச்சம் எழுந்துள்ளது. தடுப்பூசி நிறுவனங்கள் முழு வீச்சில் உற்பத்தி செய்து, சர்வதேச உற்பத்தி இலக்குகளை எட்டினாலும், உலக மக்கள் தொகையில் குறைந்தது ஐந்தில் ஒரு விழுக்காட்டினருக்காவது 2022ஆம் ஆண்டு வரை தடுப்பூசி கிடைக்காது என இந்த ஆய்வு கூறுகிறது.