உக்ரைன் மீதான ஒருவார யுத்தத்தில் 498 ரஷ்ய வீரர்கள் பலி!
Posted on 03/03/2022
உக்ரைன் மீது கடந்த ஒரு வார காலமாக நடத்தப்பட்டு வரும் யுத்தத்தில் 498 வீரர்கள் பலியாகிவிட்டதாக ரஷ்யா உறுதி செய்துள்ளது.
உக்ரைனில் ரஷ்ய மொழி பேசுகிற தேசிய இனத்தவருக்கு அதிகாரப் பரவல் வழங்கும் ஒப்பந்தத்தை அந்நாடு செயல்படுத்த வேண்டும் என்கிறது ரஷ்யா. மேலும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது என்கிறது ரஷ்யா.
இதனை அடிப்படையாக வைத்தே உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வாரம் படையெடுத்தது. கடந்த ஒரு வாரகாலமாக உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் இந்த கொடூரமான யுத்தத்துக்கு அமெரிக்கா சார்பு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
உக்ரைனில் படித்து வரும் சுமார் 80,000 வெளிநாட்டு மாணவர்கள் இந்த போரின் கோரப்பிடியில் சிக்கி உள்ளனர். இவர்களில் 2 இந்திய மாணவர்கள் ரஷ்யாவின் குண்டுவீச்சு தாக்குதலில் பலியாகி உள்ளனர். இதனிடையே 10 லட்சம் பேர் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
மேலும் 5,000க்கும் அதிகமான ரஷ்யா வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்து வருகிறது. ஆனால் ரஷ்யாவோ இதுவரை 498 வீரர்கள் பலியாகி இருப்பதாக உறுதி செய்துள்ளது. ரஷ்யாவின் இந்த யுத்தத்தில் 2000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இருதரப்பிலும் யுத்தத்தில் பலியான பொதுமக்கள், வீரர்கள் விவரம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Tags: News