ரோபோ மயமாகும் அமெரிக்க தொழில் நிறுவனங்கள் : லட்சக்கணக்கானோர் வேலை இழக்க வாய்ப்பு
Posted on 16/09/2016
அமெரிக்காவில் தற்போது எல்லா துறைகளிலும் ரோபோக்கள் ஆதிக்கம் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது. இதனால் பெரும்பாலான அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க வாழ் வெளிநாட்டினர் வேலை வாய்ப்பினை இழக்கும் அபாயம் உள்ளதாக ஒரு புள்ளிவிவர கணக்கு கூறுகிறது.
தற்சமயம் அமெரிக்காவில் சுமார் 14 கோடி பேர் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் நவீன விஞ்ஞான வளர்ச்சி மற்றும் தேவைப்பாடு போன்ற காரணங்களால் பல்வேறு துறைகளில் ரோபோக்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ரோபோக்களின் வருகையால் பல்வேறு நிறுவனங்களில் உறபத்தி பெருகுவதுடன் செலவும் குறைகிறது. ரோபோக்கள் மூலம் தரமும் பாதுகாக்கப்படுவதால் பெரும்பாலான நிறுவனங்கள் ரோபோக்களையே விரும்புகின்றன.
இதே நிலை நீடித்தால் 2021க்குள் சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமான மனிதர்கள் பார்க்கும் வேலைகளை ரோபோக்களே செய்யத் துவங்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆய்வாளர் பிரியன் ஹாப்கின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அமேசான் அலெக்சா போன்ற நிறுவனங்களும் ரோபோக்களை தங்களது நிறுவனத்தில் பணியமர்த்தும் வாய்ப்பு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது பரிசோதனை அடிப்படையில் இயங்கிவரும் தானியங்கி கார்கள் வெற்றிகரமாக நடைமுறைக்கு வரும் போது, பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் டிரைவர்கள் இல்லாமல் இயங்க கூடிய கார்களையே பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
Tags: News, Lifestyle