அக்டோபர் 2 முதல் பாதயாத்திரை: பிரசாந்த் கிஷோர்!
Posted on 06/05/2022
தற்போதைக்கு அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என தெரிவித்துள்ள தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளதாகக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இணைய பிரசாந்த் கிஷோர் மறுத்ததை அடுத்து, அவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என தகவல் வெளியானது. இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி முதல் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு பாத யாத்திரை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார். இந்த பாதயாத்திரை பிகாரின் பஷ்சிம் சேம்பரன் நகரில் இருந்து தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த 4 மாதங்களுக்கு பிகாரின் முக்கிய பிரமுகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், நல்ல அரசை உருவாக்குவது குறித்து அவர்களோடு கலந்தாலோசிக்க உள்ளதாகவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். அவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, தேவை எனில் அரசியல் கட்சி உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சக்தி காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என தெரிவித்த பிரசாந்த் கிஷோர், அக்கட்சி குறித்து வேறு எதுவும் கூற விரும்பவில்லை என குறிப்பிட்டார்.
Tags: News