ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை தாக்கும் புதிய வைரஸ்!
Posted on 01/06/2022
நீங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் என்றால் நீங்கள் உங்கல் போனை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான நேரம் இது.
இணைய வங்கி கடவுச்சொல்லை திருடும் திறன் கொண்ட மிக ஆபத்தான வைரஸை இணையவழி பாதுகாப்பு நிபுணர்கள் சமீபத்தில் கண்டறிந்தனர். நிதி சார்ந்த மோசடிகளுக்கு வழிவகுக்கும் இந்த வைரஸ் கடும் சவாலை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கடந்த ஆண்டு இணைய வங்கி வைரஸ் பதிப்பு வெளியாகி இணைய உலகில் கவலையை ஏற்படுத்தியது. தற்போது அதே வைரஸ் மேம்படுத்தப்பட்டு செயலில் உள்ளது. ERMAC 2.0 எனப்படும் இந்த வைரஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களையே பெரும்பாலும் குறிவைக்கிறது. மோசடி செயலியை பதிவிறக்குவதன் வாயிலாக இந்த வைரஸ் ஸ்மார்ட்போனுக்குள் நுழைந்து விடுகிறது. மேலும் 43 அனுமதிகளை அந்தச் செயலி கேட்கிறது. நாம் அனைத்து அனுமதிகளுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டால், மோசடியாளர்கள் நமது சாதனத்தை முழுமையாக கட்டுப்படுத்திவிடுவார்கள். நீங்கள் எந்த தளத்திலாவது உள்நுழைய முயன்றால் அந்தத் தளத்துக்குள் ஹேக்கரும் உள்நுழைவார். இதன்மூலம், இணைய வங்கியின் பயனர் விவரம், கடவுச்சொல் ஆகியவற்றை ஹேக்கர் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.
வைரஸிலிருந்து நமது போனை பாதுகாப்பது எப்படி?
கூகுள் பிளே ஸ்டோர், ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் ஆகிய அங்கீகரிக்கப்பட்ட நம்பகமான ஸ்டோர்களிலிருந்து செயலிகளை நாம் பதிவிறக்கம் செய்வது நல்லது. ஆன்டி-வைரஸ், இணைய பாதுகாப்பு மென்பொருள் ஆகியவை உங்கள் சாதனத்தில் இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் கடவுச்சொல் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. நீங்கள் வலிமையான கடவுச்சொல்லை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். விரல் ரேகை, முக அங்கீகாரம் ஆகியவற்றை ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடிந்தால் கட்டாயம் அவற்றை பயன்படுத்துங்கள். எஸ்எம்எஸ், இமெயிலில் வரும் லிங்க்குகளை பயன்படுத்தி உள்நுழையாதீர்கள். எந்தவித அனுமதியையும் தருவதற்கு முன் முழுமையாக படித்துப் பாருங்கள். உங்கள் ஸ்மார்ட்போனில் புதிய புதுப்பிப்புகள் (Updates) வந்தால் அவற்றை பயன்படுத்தி போனை அப்டேட் செய்யுங்கள். இவ்வாறாக நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்.
Tags: News