வருகிறது மின்சார கார்களின் பரந்த பயன்பாடு!
Posted on 11/05/2017
உலகளவில் கடந்த 20 ஆண்டுகளில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தம்முடைய உற்பத்திகளை விதவிதமான மாற்று வடிவங்களுடனும், கூடுதல் திறன்களுடனும் தயாரித்துக் கொண்டேயிருக்கின்றன. இதில் ஒவ்வொரு நாடும் போட்டி போட்டு செயலில் இறங்கியுள்ளன. 2030-ம் ஆண்டில் டீசல் மற்றும் பெட்ரோலால் இயங்கக்கூடிய கார் உற்பத்திகள் பெருமளவில் குறைந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் உலகளவில் மின்சாரத்தால் இயங்கும் கார்களின் பயன்பாடு எவ்வாறு உள்ளது மற்றும் மின்சார கார்களின் தேவை என்ன என்பன பற்றியும் நாம் தெரிந்துகொள்வது அவசியமாகின்றது.
டீசல் மற்றும் பெட்ரோலால் இயக்கப்பட்டு வரும் நான்கு சக்கர வாகனங்களால் புகை மாசு பெருமளவில் ஏற்படுகின்றது. இதனை தடுப்பதற்கு பல்வேறு நாடுகளிலும் உள்ள கார் உற்பத்தியாளர்களுக்கு மின்சார கார்களை மிகச்சிறந்த முறையிலும் சிக்கனமான முறையிலும் தயாரித்து வழங்குவதற்கு தம்மை முழுவீச்சில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள். அமெரிக்கா, நார்வே போன்ற நாடுகளில் மின்சாரத்தால் இயங்கும் கார்களை பயன்படுத்தும் குடிமக்களுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இன்றைய தேதியில் உலகளவில் 20 லட்சத்திற்கும் மேலான மின்சாரத்தால் இயங்கும் கார்கள் பயன்பாட்டில் உள்ளன என கண்டறியப்பட்டுள்ளன. மின்சார கார்களை உருவாக்குவதில் சீனா முன்னிலையில் இருந்து வருகின்றது. உலகளவில் தற்போது மின்சாரத்தால் இயங்கும் கார்களைப் பொறுத்தமட்டில் நிசான் லீஃப் என்பவையே அதிகளவில் உள்ளன.
மின்சாரத்தால் இயக்கப்படும் கார்களால் காற்று மாசு ஏற்படுவது குறைக்கப்படுகின்றது. அத்துடன் மாசில்லா ஆற்றல் அதாவது கிளீன் எனர்ஜி பயன்பாடும் அதிகரிக்கப்படுகின்றது. 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவிலும் டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு அதற்கு பதிலாக மின்சார கார்கள் அதிகளவில் தயார் செய்து புழக்கத்திற்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Tags: News, Lifestyle, Art and Culture