ஓ.பன்னீர்செல்வத்திற்கு செல்லூர் ராஜூ ஆதரவு?

ஓ.பன்னீர்செல்வத்திற்கு செல்லூர் ராஜூ ஆதரவு?

ஓ.பன்னீர்செல்வம் மனம் திரும்பி வந்தால் ஏற்போம் என, செல்லூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.

"எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான பிரிவு, அண்ணன் - தம்பி பிரிவு போல தான். ஓ.பன்னீர்செல்வம் மனம் திரும்பி வந்தால் ஏற்போம்,'' என, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்துத் தெரிவித்து உள்ளார்.
 
கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து, அதே பொதுக்குழுக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கான சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
 
இதன்படி, அதிமுக பொருளாளர் உட்பட அனைத்து கட்சிப் பதவிகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இது குறித்து விளக்கம் அளித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புகள் சட்ட கழக விதிகளின்படி செல்லாது என, தெரிவித்தார்.
 
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:
 
தேர்தல் நேரத்தில் ஹிந்து மதத்தை நேசிப்பது போல தி.மு.க.,வினர் செயல்படுவர். தர்மபுரி தி.மு.க., - எம்.பி., செந்தில் குமார், பொதுப்பணித் துறை முதன்மை பொறியாளரை பொது இடத்தில், இங்கிதம் இல்லாமல் திட்டி உள்ளார். சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை வாங்க இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது, ஆன்மிக சுற்றுலா என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர்.
 
தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.,வுடன் கூட்டணி தொடர்வது குறித்து கட்சி முடிவெடுக்கும். மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வர வேண்டும். அ.தி.மு.க.,வில் காளிமுத்து, ஆர்.எம். வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோர் தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டு திரும்பியவர்கள் தான். எனவே, பழனிசாமி, பன்னீர்செல்வம் பிரிவும் அண்ணன் - தம்பி போராட்டம் மாதிரி தான். ஓ.பன்னீர்செல்வம் மனம் திருந்தி வந்தால் நிச்சயம் ஏற்போம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்து கொண்டு, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செல்லூர் ராஜூ குரல் எழுப்பி வருவது, மதுரையில் உள்ள ரத்தத்தின் ரத்தங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top