அதிமுகவுக்கு புதிய இணை ஒருங்கிணைப்பாளர் நியமனம் - ஓபிஎஸ்ஸின் அடுத்த அதிரடி!
Posted on 25/07/2022
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கத்தை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களான ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோரும், அவரது மகனும் எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்தும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல், கட்சிக் கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக முன்னாள் எம்எல்ஏ திண்டுக்கல் சுப்புரத்தினம், அம்மா பேரவை துணைச் செயலாளர் மாறன், இலக்கிய அணி துணைச் செயலாளர் முருகேசன், வலசை மஞ்சுளா, வேலூர் சுரேஷ் பாபு,திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவகர் உள்ளிட்டோரையும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் கட்சி பணியாற்ற வேண்டுமென்று ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதேபோல் நேற்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அதிமுகவுக்கு 14 புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்தார்.
இந்நிலையில் ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு இன்று மீண்டும் அறிக்கை வெளியிட்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கத்தை நியமிப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், துணை ஒருங்கிணைப்பாளர்களாக மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் ஆகியோரை நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags: News