ஷிகர் தவான் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி
Posted on 07/07/2022
ஜூலை மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி, அடுத்ததாக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலாவதாக 20 ஓவர் போட்டி தொடங்குகிறது. டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்திருக்கும் இந்திய அணி, 20 ஓவர் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
ஏற்கனவே ஹர்திக் பாண்டியா தலைமையில் அயர்லாந்து சென்ற 20 ஓவர் அணி, இங்கிலாந்து தொடருக்காக அங்கிருக்கும் இந்திய அணியுடன் இணைந்துள்ளனர். டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு முதல் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருப்பதால், அயர்லாந்து சுற்றுப் பயணத்தில் இடம்பெற்றிருந்த வீரர்கள் ரோகித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கின்றனர். 2வது மற்றும் மூன்றாவது 20 ஓவர் போட்டியில் கோலி மற்றும் பும்ரா இந்திய அணியுடன் இணைந்து கொள்கின்றனர்.
இந்த தொடரை முடித்தவுடன் உடனடியாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி,5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவதாக ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. ஜூலை 22 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணியில், ஜடேஜா துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவ் மற்றும் பிரித்திவி ஷா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ரோகித் சர்மா ,விராட் கோலி ,பும்ரா ,ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
Tags: News