வெற்றியைத் தந்தைக்குச் சமர்ப்பித்த குருணல் பாண்ட்யா!
Posted on 24/03/2021
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யா, வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அறிமுக வீரர்களாக அடியெடுத்து வைத்தனர். ஏற்கனவே சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஆடியுள்ள குருணல் பாண்ட்யா இந்தியாவின் 233-வது ஒரு நாள் போட்டி வீரர் ஆவார்.
போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பந்து வீச்சு தேர்வு செய்த நிலையில், இந்தியா பேட்டிங்கை தொடங்கியது. இந்தியா 5 விக்கெட்டுக்கு 205 ரன்களுடன் (40.3 ஓவர்) தடுமாறியது. இந்த நெருக்கடியான சூழலில் விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலும், அறிமுக வீரர் குருணல் பாண்ட்யாவும் கைகோர்த்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 318 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இங்கிலாந்து, முடிவில் 42.1 ஓவர்களில் 251 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
இந்த வெற்றியை அடைவதற்கு உறுதுணையாக இருந்தவர்களில் முக்கிய வீரர் குருணல் பாண்ட்யா. அவரது தந்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது 71வது வயதில் காலமானார். போட்டியில் பெற்ற வெற்றியை தொடர்ந்து தனது தந்தையை நினைவுப்படுத்தி குருணல் பாண்ட்யா டுவிட்டரில் பதிவிட்டார்.