4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி

4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி

இந்தியா-அயர்லாந்துக்கு இடையேயான டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 

இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று  மலாஹெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இஷான் கிஷன் 3 ரன்களில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
 
அடுத்ததாக சாம்சனுடன், தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. அதிரடியில் மிரட்டிய இருவரும் தங்களது அரை சதத்தை பதிவு செய்தனர். இந்த ஜோடியில் சிறப்பாக ஆடி வந்த சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து  தீபக் ஹூடா 55 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.
 
பின்னர் சூர்யகுமார் யாதவ் 15 (5) ரன்களிலும், தீபக் ஹூடா  104 (57) ரன்கள்களும் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் (0), அக்சர் பட்டேல் (0), ஹர்சல் பட்டேல் (0) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இறுதியில் புவனேஷ்வர் குமார் 1 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 15 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 227 ரன்கள் எடுத்தது.
 
தொடர்ந்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணியின் சார்பில் பால் ஸ்ட்ர்லிங் மற்றும் கேப்டன் பால்பேர்னே ஆகியோர் களமிறங்கி தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடியில் பால் ஸ்ட்ர்லிங் 40 (18) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டிலேனி (0) ரன் ஏதும் எடுக்காமலும், மறுமுனையில் சிறப்பாக ஆடிய பால்பேர்னே 34 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்திருந்த நிலையில் 60 (37) ரன்களிலும், லார்சன் டூக்கர் 5 ரன்னிலும் வெளியேறினர்.
 
அடுத்ததாக ஹேரி டெக்டாருடன், ஜார்ஜ் டாக்ரெல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ஆடி ரன் சேர்ப்பில் ஈடுபட்டு வந்த டெக்டார் 39 (28) ரன்களில் கேட்ச் ஆனார். இறுதியில் ஜார்ஜ் டாக்ரெல் 24 (16) ரன்களும், மார்க் ஆடைர் 23 (12) ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனையடுத்து 20 ஒவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 221 ரன்கள் எடுத்தது.
 
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல், பிஸ்னோய் மற்றும் உம்ரன் மாலிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் அயர்லாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.
 
கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியின் இந்த வெற்றி அவரது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top