இந்தியா அபார வெற்றி!
Posted on 13/07/2022
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கெனிங்டன் ஓவலில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து பேட்டிங் ஆர்டர் பும்ராவின் அபாரமான பவுலிங்கில் மண்டியிட்டு சரணடைந்தனர். ஜேசன் ராய், ஜோ ரூட், லிவிங்ஸ்டோன் ஆகிய மூவரையும் பும்ரா டக் அவுட்டாக்கினார். பென் ஸ்டோக்ஸை ஷமி டக் அவுட்டாக்கினார். பேர்ஸ்டோவை பும்ரா 7 ரன்னில் வீழ்த்தினார். பட்லர் மட்டும் 30 ரன்கள் அடித்தார். அவரையும் நீடிக்கவிடாமல் ஷமி வீழ்த்தினார்.
பின்வரிசையில் சிறிய பங்களிப்பு செய்த டேவிட் வில்லி (21) மற்றும் கர்ஸ்(15) ஆகிய இருவரையும் பும்ரா வீழ்த்த, 25.2 ஓவரில் வெறும் 110 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய பும்ரா 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 111 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா தொடக்கம் முதலே அடித்து ஆடி அரைசதம் அடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து தவான் நிதானமாக ஆடினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ரோஹித் சர்மா 58 பந்தில் 76 ரன்களை குவித்தார். அவரது அதிரடியால் 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
Tags: News