பட்டம் வென்ற கரோலினா மரின்!
Posted on 08/03/2021
ஸ்விட்சர்லாந்தின் பசெல் நகரில் ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார். இவர்கள் இருவரும் முன்னதாக 14 போட்டிகளில் எதிர்த்து விளையாடி உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.
உலகின் 3ம் நிலை வீராங்கனையான கரோலினா மரின், 7ம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்துவை 21-12, 21-5 என்ற நேர் செட்டில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இந்த போட்டி ஒரு தரப்பாக 35 நிமிடங்களில் நடந்து முடிந்தது. இன்றைய போட்டியில் பி.வி.சிந்து மரினிடம் சரணடைந்தார் என்றே சொல்ல வேண்டும். முதல் செட்டில் மரினுக்கு 21-12 என்ற கவுரவமான போட்டியை அளித்த சிந்துவால் 2வது செட்டில் 5 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது பரிதாபமாக அமைந்தது.