பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் காலமானார்!
Posted on 05/04/2021
உலக கிரிக்கெட்டில் இந்தியாவை இடம் பெற செய்தவர்களில் முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் சி.கே. நாயுடு. இவரது இளைய மகள் சந்திரா நாயுடு (வயது 88).
இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளரான இவர் கடந்த சில காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அவர் நேற்று (ஞாயிற்று கிழமை) மதியம் காலமானார்.
இதனை அவரது சகோதரியின் மகன் விஜய் நாயுடு உறுதி செய்துள்ளார். இந்தூரில் உள்ள அரசு கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த சந்திரா, ஹோல்கர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
அந்த காலத்தில் பெண்கள் சல்வார் கமீஸ் அணிந்தபடி கிரிக்கெட் விளையாடியுள்ளனர். கிரிக்கெட் விளையாட்டில் கொண்ட ஆர்வத்தினால் பின்னாளில் சர்வதேச போட்டிக்கான இந்தியாவின் முதல் பெண் வர்ணனையாளரானார்.