வென்றது பெங்களூரு அணி – காதலுடன்
Posted on 05/05/2022
நேற்று நடைபெற்ற 15வது ஐபிஎல்-ன் 49-வது போட்டியில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் மோதின. இப்போட்டியின்போது பெங்களூரு அணி ரசிகை ஒருவர் அதேஅணி ரசிகருக்கு தனது காதலை வெளிப்படுத்திய நிகழ்வு தற்போது வைரலாகியுள்ளது.
15-வது ஐபிஎல்-ன் 49-வது போட்டி மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியமில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு – சென்னை அணிகள் களம்கண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 62 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில், விராட் கோலி 30 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தனர். இதனால் 174 ரன்கள் வெற்றி இலக்காக சென்னை அணிக்கு அமைந்தது.
அதனைத்தொடர்ந்து விளையாடிய சென்னை அணி வீரர்கள் தொடக்கத்தில் சிறப்பான அடித்தளம் அமைத்தனர். வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கேப்டன் தோனி களத்தில் இருந்ததால், ரசிகர்கள் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், தோனி 3 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது சென்னை அணி.
இதற்கு இடையில் தான், பெங்களூரு அணி ரசிகை ஒருவர் பெங்களூரு அணி ஜெர்சியுடன் இருந்த ரசிகருக்கு தனது காதலை வெளிப்படுத்தினார். அப்போது, அவர் அந்த காதலை ஏற்றார். இந்த நிகழ்வை சுற்றி இருந்த மற்ற ரசிகர்கள் தங்களது போனில் வீடியோவாக பதிவுசெய்து மகிழ்ந்தனர். இதனை வென்றது பெங்களூரு அணி – காதலுடன் என நெட்டிசன்கள் பலரும் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.
Tags: News