அமெரிக்காவில் முதல் இந்திய பெண் மேயர்
Posted on 16/12/2016
நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான குபெர்டினோ நகர மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள குபெர்டினோவில் நகரத்தில் வசித்து வருபவர் சவிதா வைத்தியநாதன். இந்தியப் வம்சாவளியை சேர்ந்த இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். எம்.பி.ஏ. பட்டதாரியான சவிதா, கணித ஆசிரியையாக அங்குள்ள பள்ளியில் பணியாற்றினார். பின்னர், தனியார் வங்கியில் பணியாற்றிய இவர் பல்வேறு சமூகச்சேவைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அந்த பகுதி மக்களின் அமோக ஆதரவை இவர் பெற்றார். பின் மேயர் பதவிக்கு போட்டியிட்ட இவர் வெற்றி பெற்று குபெர்டினோ நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து கடந்த வாரம் இவரது பதவி ஏற்பு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொள்ள அவரது தாயார் இந்தியாவில் இருந்து கலிபோர்னியா வந்தார். அவரது முன்னிலையில் சவிதா மேயராக பதவி ஏற்றார்.
இதுக்குறித்து சவிதா வைத்தியநாதன் கூறுகையில், "இந்நிகழ்ச்சி என் வாழ்வின் மிக முக்கியமான தருணம்" என்று கூறினார்.
அவருக்கு அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலர்வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Tags: News