தமிழக அரசுக்கு வாவா சுரேஷ் பாராட்டு!
Posted on 04/04/2022
இதுவரை தான் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து உள்ளதாகவும்,அதில் 250 க்கும் மேற்பட்டவை ராஜநாகங்கள் என்றும் பிரபல பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ் கூறினார்.
தமிழகத்தில் இருளர் சமுதாய மக்களுக்கு பாம்பு பிடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது பாராட்டுக்குரியது என்றும் தமிழகத்தை போன்று கேரளா அரசும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை புதுப்புரைக்கல் பகுதியில் உள்ள நாகர்காவு கோவில் விழாவில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரரும் சமூக ஆர்வலருமான வாவா சுரேஷ் கலந்து கொண்டார். கோயிலில் நாகர் சிலைகளை வணங்கிவிட்டு குத்து விளக்கு ஏற்றி பூஜையில் கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மக்களிடம் கலந்துரையாடி தனது பாம்பு பிடி அனுபவம் மற்றும் பாம்பு கடித்து உயிருக்கு போராடியது குறித்தெல்லாம் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் இருளர் சமுதாய மக்களுக்கு பாம்பு பிடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது வரவேற்க தக்கது என்றும் அதேபோன்று கேரளாவிலும் அரசு பாம்பு பிடிப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
பாம்புகளை பிடித்து அதில் இருந்து எடுக்கப்படும் விஷம் அதிபயங்கரமான கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்த வாவா சுரேஷ். இதுவரை தான் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து உள்ளதாகவும்,அதில் 250 க்கும் மேற்பட்டவை ராஜநாகங்கள் என்றும் கூறினார்.
இந்திய இராணுவத்தில் உள்ளவர்களுக்கும் பாம்பு பிடிக்கும் பயிற்சி வழங்கி உள்ளதாவும் மேலும் பாம்பு பிடிப்பதில் ஆர்வம் சிறு வயதில் விளையாட்டாக உருவாகியது என்றும் தற்போது அது பலரது உயிர்களை பாதுகாக்கும் ஒரு சேவையாக மாறி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags: News, Hero