இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசுத்தலைவர்!
Posted on 10/09/2016
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சென்னையில் இரண்டு நிகழ்ச்சிகளில் இன்று (செப்.10) பங்கேற்கிறார்.
இதற்காக தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த பிரணாப் முகர்ஜியை, ஆளுநர் வித்யாசாகர் ராவ், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி, கே.பாண்டியராஜன், மேயர் சைதை துரைசாமி, தலைமைச் செயலர் பி.ராம மோகன ராவ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதன்பின் அவர் உதகைக்கு புறப்பட்டார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை சென்னை திரும்பிய பிரணாப் முகர்ஜி, ஆளுநர் மாளிகையில் தங்கினார்.
இரண்டு நிகழ்ச்சிகள்:
சென்னையில் சனிக்கிழமை நடைபெறும் இரண்டு நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார். காலை 7 மணியளவில், பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பயிற்சியை முடித்து படையில் சேரும் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும் கரூர் வைஸ்யா வங்கியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பகல் 1 மணிக்கு பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னையிலிருந்து விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.
பிரணாப் முகர்ஜியின் வருகையையொட்டி, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags: News, Academy