ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் விநியோகம்
Posted on 06/03/2017
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. இந்த மாதம் 22-ம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி உள்பட 17 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதேபோல தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் விண்ணப்ப விநியோகம் நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் 11 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விண்ணப்ப விநியோகம் நடைபெறுகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் மார்ச் 23-ம் தேதியாகும். மாவட்ட கல்வி அலுவலகம் உள்பட தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மையங்களில் விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படுகிறது. தேர்வுக்கட்டணம் பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாயும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 250 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியருக்கு ஏப்ரல் 29-ம் தேதி முதல் தாள் தேர்வும், பட்டதாரி ஆசிரியருக்கு ஏப்ரல் 30-ம் தேதி இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற இருக்கிறது.
Tags: News