ஏழை மக்களுக்காக கண்டுபிடிப்புகள் நிகழ்த்த வேண்டும் - மோடி!
Posted on 02/01/2018
கொல்கத்தாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இயற்பியல் பேராசிரியர் சத்யேந்திரநாத் போஸின் 125வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கொல்கத்தாவில் தேசிய அறிவியல் மையத்தில் கொண்டாடப்பட்ட இந்த விழாவில் டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் மோடி உரையாற்றினார்.
அப்போது இந்திய மொழிகள் அனைத்திலும் அறிவியலை நாம் எடுத்து செல்ல வேண்டும். அதன் மூலம் இளைஞர்கள் அறிவியலை ஆர்வத்துடன் படிப்பார்கள். வருங்காலத்தில் அவர்கள் மூலமே புதுபுது கண்டுபிடிப்புகள் நிகழும் என்று மோடி குறிப்பிட்டு உள்ளார்.
எதிர்கால கண்டுபிடிப்புகள் அனைத்தும் சமூக பொருளாதார பிரச்னைகளை கருத்தில்கொண்டு, அதை நீக்கும் வகையில் புதிதான அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் வடிவமைக்க வேண்டும். அதன் மூலமே ஏழை எளிய மக்களும் அறிவியல் சாதனங்களை எளிய வகையில் பயன்படுத்தும்படி அமையும்.
இதை கருத்தில் கொண்டே மத்திய அரசு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தை தொடங்கி உள்ளது. இதன் மூலம் சூரிய மின்சக்தி, பசுமை ஆற்றல், நீர்பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றிற்கு தனித்தனி பிரிவுகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் கொண்டுவரப்படும் கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்தியா விரைவில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் புதிய உச்சத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். மாணவர்களுக்கு அறிவியல் குறித்து உற்சாகம் அளித்து அவர்களுக்கும் இது குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அறிவியலை பிராந்திய மொழிகள் கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
Tags: News, Art and Culture, Star