அவசர சட்டத்தை நிராகரித்த தமிழக மக்கள்!
Posted on 21/01/2017
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று பிறப்பித்தார். ஆனால் இந்த அவசர சட்டத்தை போராட்ட களத்தில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களும் நிராகரித்துவிட்டனர். தங்களுக்கு நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடப்பதற்கான சட்டமே தேவை என பொதுமக்கள் ஒரே குரலில் தெரிவித்துள்ளனர்.
மிருகவதை என்ற பெயரால் தமிழரின் பண்பாட்டு உரிமையான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. கடந்த 2 ஆண்டுகாலமாக இத்தடை உடையும் என தமிழகம் காத்திருந்தது.
ஆனால் தடை உடையவில்லை. மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டு தமிழக மக்கள் போர்க்களத்தில் குதித்தனர். அலங்காநல்லூரில் மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கி வைத்த புரட்சி விதை தமிழகம் முழுவதும் பற்றி எரிந்தது. சென்னை மெரினாவில் பல லட்சம் பேர் 5 நாட்களாக திரண்டு போராடினர்.
ஒட்டுமொத்த தமிழகமே வீதிக்கு வந்து போராடியதால் வேறுவழியின்றி அரசுகள் பணிந்தன. மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இதற்கான அவசர சட்டத்தை ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று பிறப்பித்திருக்கிறார். ஆனாலும் இந்த அவசர சட்டத்தை ஒட்டுமொத்தமாக மக்கள் நிராகரித்துவிட்டனர். இதனால் வேறுவழியே இல்லாமல் நிரந்தரமான சட்டத்தை இயற்ற வேண்டிய நெருக்கடி நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags: News, Madurai News, Art and Culture