அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய பன்னீருக்கு நெருக்கடி!

அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய பன்னீருக்கு நெருக்கடி!

புதிய முதல்வராக, இடைப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற சிறிது நேரத்தில், 'அரசு பங்களாவை உடனே காலி செய்ய வேண்டும்' என, 'நோட்டீஸ்' அனுப்பி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, நெருக்கடி தரப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக, நேற்று(பிப்.,16) வரை இருந்த, பன்னீர்செல்வம், 2011 முதல், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இங்கு இருந்தபடியே, சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தமிழகத்தின் புதிய முதல்வராக, இடைப்பாடி பழனிச்சாமி நேற்று பொறுப்பேற்றார். இதனால், முதல்வர் பதவி பறிபோய், பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,வாக மட்டுமே உள்ளார். இடைப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற சிறிது நேரத்தில், பொதுப்பணித்துறை மூலம், பன்னீர்செல்வத்திற்கு திடீர் நெருக்கடி தரப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுப்பணித்துறை செயலர் அலுவலகம் தான், அமைச்சர்களுக்கு பங்களாக்களை ஒதுக்குகிறது. பன்னீர்செல்வம், தற்போது, எம்.எல்.ஏ.,வாக மட்டுமே உள்ளார். இதனால், அரசு பங்களாவை காலி செய்ய வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. துறை செயலர் அலுவலகத்தில் இருந்து, தபால் மூலம், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இன்று, அவருக்கு நோட்டீஸ் கிடைக்கும். நோட்டீஸ் கிடைத்தபின், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம், அரசு பங்களாவை அவர் காலி செய்ய வேண்டும்.

இல்லை என்றால், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்க வாய்ப்புள்ளது. இந்த பங்களா, புதிதாக அமைச்சரான செங்கோட்டையனுக்கு வழங்கப்படலாம். அது, இன்னும் முடிவாகவில்லை. பன்னீர்செல்வத்திற்கு, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில், அறை ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top