பொதுமக்களின் ஆதார் விவரங்களை யாரும் திருடிவிட முடியாது - மத்திய அரசு
Posted on 06/03/2017
பொதுமக்களின் ஆதார் விவரங்களை யாரும் திருடிவிட முடியாது எனவும், அவை மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாட்டில் ஒவ்வொருவருக்கும் முகம், கருவிழிகள் மற்றும் கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டு பெயர் முகவரியுடன் ஆதார் எண் வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் சமையல் எரிவாயு, குடும்ப அட்டை மற்றும் பல்வேறு அரசு மானியங்கள், சலுகைகளை பெறுவதற்கு ஆதார் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
செல்போன் சேவைக்கும் இவை கேட்கப்படும் நிலையில், ஆதார் விபரங்கள் திருடப்படுவதாகவும், அவை இணையம் வழியே யாருக்கும் கிடைக்கும் வகையில் உள்ளது என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.
ஆனால், ஆதார் விவரங்களை நிர்வகிக்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இதனை மறுத்துள்ளது. ஆதார் தகவல்களை யாராலும் திருட முடியாது என்றும், அவை உலகிலேயே மிக பாதுகாப்பான முறையில் கையாளப்படுதவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவரது அனுமதி இல்லாமல் அல்லது அவருக்கு தெரியாமல், ஆதார் தகவல்களை, வங்கிகளோ, செல்போன் நிறுவனங்களோ அல்லது மற்ற அமைப்புகளோ பயன்படுத்த முடியாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த, இரண்டரை ஆண்டுகளில் ஆதார் மூலம் நேரடியாக மானியங்களை வழங்கியதில் 49 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tags: News, Star