ஜல்லிக்கட்டு மனுவை வாங்காமல் அ.தி.மு.க எம்.எல்.ஏ-களை அவமதித்த மோடி
Posted on 11/01/2017
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏதுவாக மத்திய அரசு ஒரு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அதிமுக எம்.பிக்கள் இன்று மோடியை சந்திக்க டெல்லி விரைந்தனர். இதுதொடர்பாக, அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவின் கோரிக்கை மனுவை மத்திய வன துறை மற்றும் சுற்றுசூழல் துறை இணை அமைச்சரிடம் அளித்துள்ளனர்.
இதன்பிறகு, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான மனுவை கொடுக்க தமிழக எம்.பி.கள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் பிரதமர் மோடி தமிழக எம்.பி.களை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். இதனால் ஏமாற்றமடைந்த தம்பிதுரை தலைமையிலான, அதிமுக எம்.பிக்கள் என்ன செய்வது என தெரியாமல், எம்பிக்கள் பிரதமரின் அலுவலத்தில் அளித்தனர்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை , "ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக சசிகலா எழுதிய கடிதத்ததை பிரதமரிடம் கொடுக்க வந்தோம். ஆனால், பிரதமர் மோடி கென்ய நாட்டு அதிபருடனான சந்திப்பினால் எங்களை சந்திக்கவில்லை. எனவே பிரதமரின் முதன்மை செயலாளர் மிஸ்ராவிடம் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளோம், என்று தெரிவித்தார்.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை போல, கென்ய அதிபர் வருகையை காரணம் காட்டி திரும்பியுள்ளது அதிமுக குழு. அதிமுக எம்.பிக்களுக்கு இதுபோன்ற அவமானம் நிகழ்வது புதிது கிடையாது. கடந்த வருடம் அக்டோபர் மாதம், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோதும், மோடியை பார்த்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த எம்.பிக்கள் அவரது அலுவலகம் சென்றனர். ஆனால் எம்.பிக்கள் உள்ளேயே விடாமல் விரட்டப்பட்டனர்.
இந்த நிலையில் இப்போதும் அதிமுக எம்.பிக்களுக்கு அவமானம் இழைக்கப்பட்டுள்ளது. இதை கடுமையாக எதிர்க்க கூட முடியாமல் கென்ய அதிபரை நோக்கி கை காட்டிவிட்டு அதிமுக எம்.பிக்கள் திரும்பியுள்ளது, அதைவிட பெரும் கொடுமை. ஏனெனில் கடந்த முறை கூட அதிமுக எம்.பிக்கள் ஓரளவுக்காவது எதிர்ப்பை பதிவு செய்தனர். இம்முறை அதுவும் கிடையாதாம். இத்தனைக்கும் எம்.பிக்கள் எண்ணிக்கை அடிப்படையில், நாட்டின் 3வது பெரிய கட்சி இதுதான் என்பது கவனிக்கத்தக்கது.
Tags: News, Madurai News, Lifestyle