முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி கடிதம்!
Posted on 05/08/2022
கேரளாவுக்கான நீர் திறப்பு குறித்து 24 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்கவும் தமிழக முதல்வருக்கு பினராயி விஜயன் கோரிக்கை.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதால், கேரளாவின் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக பொதுப்பணித்துறை முதல் எச்சரிக்கை விடுத்தது. அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டினால் கேரளாவிற்கு உபரிநீர் திறக்கப்படும் 13 மதகுகளை தண்ணீர் சென்றடையும். இதனால் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக பொதுப்பணித்துறையினர் முதல் எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர்.
அணையின் நீர்மட்டம் 137.5 அடியை எட்டும் போது கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்வரத்து விநாடிக்கு 7,200 கனஅடியாக இருக்கும் நிலையில், தமிழகத்திற்கு விநாடிக்கு 2016 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 136.9 அடியாகவும், நீர் இருப்பு 6,357 மில்லியன் கனஅடியாக உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட்டால், முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் 24 மணி நேரத்துக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில், இடுக்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், கனமழை தொடர்ந்தால், அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட்டால், முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் 24 மணி நேரத்துக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.
Tags: News