ஜெயலலிதாவும்தான் சிரித்திருக்கின்றார் - சசிகலாவிற்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
Posted on 08/02/2017
ஜெயலலிதா சட்டமன்றத்தில் தனக்கு கூட பரஸ்பர வணக்கம் செய்து சிரித்திருக்கிறார் என ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சசிகலா, பன்னீர் செல்வத்திற்குப் பின்னால் திமுக இருப்பதாகக் கூறினார். அதற்கு ஆதாரமாக, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டதாகக் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், விலங்குகளால் சிரிக்க முடியாது எனவும், மனிதனுக்குரிய அடையாளமே சிரிப்புதான் எனவும் பதில் சொல்லியிருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ஜெயலலிதா சட்டமன்றத்தில் தனக்கு பரஸ்பர வணக்கம் செய்து சிரித்திருக்கிறார் என்றும் சசிகலா இப்படியொரு கேள்வியை அவரிடம் கேட்டிருக்க முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவிற்குள் சிரிப்பாய் சிரிக்கும் காட்சிகளுக்கு, என்னைப் பார்த்து ஓ.பி.எஸ் சிரித்ததுதான் காரணம் என்று சசிகலா கூறுவது வெட்கக்கேடானது. குறுக்கு வழியில் முதலமைச்சராக முடியாத ஏக்கத்தில், எதைத் தின்னால் பித்தம் தெளியும் என போலி விமர்சனத்தை திமுக மீது சசிகலா நடராஜன் வீசுகிறார் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஓபிஎஸ் பட்ட அவமானங்களை ஜெயலலிதா சமாதி முன்பு நின்று பட்டியலிட்டிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், திராணி இருந்தால் அதற்கு பதில் சொல்லுங்கள் திமுகவை சீண்டாதீர்கள் என்றும் கூறியுள்ளார். தமிழக அரசு நிர்வாகம் எட்டு மாதங்களுக்கு மேல் முடங்கி, அசாதாரண சூழல் நிலவுவதால் ஆளுநர் உடனே சென்னை வந்து தமிழக நலனை பாதுகாக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் அந்த ட்விட்டர் பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags: News, Lifestyle, Art and Culture