சுங்கக் கட்டணம் குறைகிறது? - மத்திய அரசு திட்டத்தால் ஜாக்பாட்!
Posted on 23/03/2022
60 கிலோ மீட்டருக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும், புதிய நடைமுறை 3 மாதங்களில் அமலுக்கு வரும் எனவும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் இன்று பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன், தமிழகத்தில் விதிகளை மீறி சுங்கச்சாவடிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பாஜகவைச் சேர்ந்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்து பேசியதாவது: தேசிய நெடுஞ்சாலை விதிகள் 2008 சட்டப்படி 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி இருக்கலாம். இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு குறைவாக செயல்படும் சுங்கச்சாவடிகள் மூடப்படும். மேலும், 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும். அந்த தொலைவிற்குள் இன்னொரு சுங்கச்சாவடி இருந்தால் அவை அடுத்த மூன்று மாதங்களுக்குள் அகற்றப்படும்.
மேலும், சுங்கச்சாவடிகளுக்கு அருகில் உள்ளவர்கள் அடிக்கடி கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கும் வகையில், ஆதார் அட்டையை காண்பித்தால் அவர்கள் சாவடியைக் கடக்க பாஸ் வழங்கப்படும். ஆதார் அட்டையை காண்பித்தால் கட்டணம் செலுத்த வேண்டாம் என்பதை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 3 மாதங்களில் புதிய நடைமுறை அமலுக்கு வரும். அரசுக்கு பணம் முக்கியம் தான், அதே சமயம் மக்களும் சிரமப்படக் கூடாது.
டெல்லி - அமர்தசரஸ் - காத்ரா எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லி -அமிர்தசரஸ் இடையேயான சாலை பணி இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும். இதன் மூலம் டெல்லி -அமிர்தசரஸ் இடையேயான பயண நேரம் 4 மணி நேரம் வரை குறையும். மேலும் ஸ்ரீநகர் - ஜம்மு சாலை, காத்ரா - அமிர்தசரஸ் - டெல்லி சாலையுடன் இணைக்கப்பட உள்ளது. இது தடையற்ற போக்குவரத்துக்கு வழிவகுக்கும். இந்தச் சாலையின் மூலம் ஸ்ரீநகரில் இருந்து மும்பைக்கு விரைவாக செல்ல முடியும்.
சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து கார்களிலும் ஆறு ‛ஏர் பேக்' இருப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நாட்டில் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் பேர் சாலை விபத்துகளில் பலியாகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக உள்ளனர். இதனால் உலக வங்கியுடன் இணைந்து மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. உலக வங்கி தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றி விபத்துகளை குறைப்பதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மாதிரியை அமல்படுத்த முயற்சி மேற்கொள்கிறோம்.
Tags: News