ரஜினியின் அரசியல் பிரவேசம் சாத்தியமாகுமா?
Posted on 24/05/2017
ஒரு 50 வருடங்களுக்கு முன்னாள் தமிழ் திரையுல நடிகர் நடிகைகள் தங்களுடைய நடிப்பு திறமைகளை காட்டி மக்களின் மனதில் நிலைத்திருந்தார்கள். மக்களாலும் ரசிகர்களாலும் வழங்கப்பட்ட இந்த கௌரவுமே மிகப்பெரிய மகுடம் என நினைத்தார்கள் அந்தக்கால தமிழ் திரைப்பட கலைஞர்கள். சற்று பின்னால் வந்த திரைப்பட கலைஞர்கள் கொஞ்சம் புகழ் அடைந்தவுடன் அரசியலில் காலடி எடுத்து வைத்து அதிலும் சிலர் சோபிக்கவே செய்தார்கள். இதற்கு உதாரணமாக எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரை முக்கியமாக குறிப்பிடலாம். ஆனால், இதையே அடிச்சுவடாக எடுத்துக்கொண்டு, இப்போதைய தமிழ் திரைப்பட உலகில் புகழ் அடைந்த அனைவரும் தமிழ் நாட்டை கட்டி ஆள வேண்டும் என்பது தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.
ஒரு தமிழ் திரைப்பட நடிகர் பெங்களூரிலோ ஹைத்ராபாத்திலோ அல்லது மும்பையிலோ சென்று தமது நடிப்பு திறமையின் மூலமாக புகழ் அடைந்து அந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க முடியுமா என்று சிந்தித்து பார்த்தால் முடியவே முடியாது என்பது தான் பதிலாக இருக்க முடியும். ஆகவே, வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் நன்றாக படியளந்து அவர்களை வாழ வைக்கத்தான் முடியுமே ஒழிய தமிழகத்தின் அரசியல் வாழ்வாதாரத்தையே அவர்களின் கையில் ஒப்படைத்து வேடிக்கை பார்க்க முடியாது. மேலும், தமிழ் திரைப்பட துறையிலிருந்து இதுவரையிலும் அரசியலுக்கு வந்த யாரும் தமிழக அரசியலையும் தமிழக பொருளாதாரத்தையும் ஒருசிலரை தவிர்த்து, முழுமையான பொதுநல நோக்கோடு சீர்படுத்தியதாக சரித்திரமே இல்லை.
தவிரவும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் குதிக்க போவதாக செய்திகள் வந்தவண்ணமாக உள்ளன. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டே இருக்கின்றது. தமிழக பிரச்சனைகள் எதிலுமே இதுவரையிலும் தலைகாட்டாத ரஜினி சந்தர்ப்ப காற்றை பயன்படுத்தி அரசியலில் குதிக்க முடி வு செய்திருப்பது விவேகமான ஒரு செயலாக தோன்றவில்லை என பொதுமக்கள் கருதுகின்றார்கள். எனவே, தம்முடைய திரைப்பட அனுபவத்தின் மூலமாகவும் கடின உழைப்பாலும் உருவாக்கியிருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்களை பாதுகாத்து கொண்டு அத்துடன் முடிந்தால் தமிழக மக்களுக்கு ஏதாவது பொது சேவைகளையும் அவ்வப்போது ரஜினி நல்கி வரலாம் என்று பொதுமக்கள் மனதார எண்ணுகிறார்கள். இது சரியான கருத்து என்றே பெரும்பாலான தமிழக மக்களும் கருதுகின்றார்கள்.
அரசியல் ஒரு சாக்கடை என தத்துவ ஞானி சாக்ரடீஸ் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருந்தார். இதை தற்போது ரஜினி மனதில் நிறுத்தி செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.
இருந்தபோதிலும், "மாற்றம் ஒன்று தான் மாறாதது" என்று அவர் உச்சரித்த வசனத்தை போலவே, இவருக்குள் மாற்றங்கள் சாத்தியமே, இவரால் மாற்றங்களும் சாத்தியமே!
Tags: News, Madurai News