தமிழக மாவட்டங்களில் வெள்ள அபாயம்!!!
Posted on 12/09/2017
கிருஷ்ணகிரி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்த போதும், 5 மாவட்டங்களுக்கு தொடர்ந்த 25வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதியில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து, அதன் முழு உயரமான 44.28 அடியில் நேற்று காலை நிலவரப்படி 42.64 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து அந்த தண்ணீர் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது.
அதே போல் கிருஷ்ணகிரி அணையின் மொத்த உயரமான 52 அடியில், நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 50.30 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,122 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 2,122 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணையில் தொடர்ந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்காதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்த போதிலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களிலும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு தொடர்ந்து 25வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags: News, Madurai News