இந்தியாவில் விரைவில் 5ஜி - ஏலத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு
Posted on 15/06/2022
இந்தியாவில் 5-ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை மாதத்திற்குள் 5-ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 5-ஜி சேவைக்காக ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்துவதற்கான தொலைத்தொடர்புத் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரும் ஜூலை மாத இறுதிக்குள் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெற உள்ளது. ஏலத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 5-ஜி சேவை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்படும்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செலவைக் குறைக்க 72097.85 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் 20 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்படுகிறது. நாட்டின் மூன்று முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடபோன் ஐடியா, ஏர்டெல் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஜியோ ஆகியவை இந்த ஏலத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5-ஜி சேவை தற்போதுள்ள 4-ஜி சேவையை விட 10 மடங்கு வேகமாக இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செலவைக் குறைப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏர் வேவ்களுக்கான முன்பணத்தை நீக்கியதோடு, ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனங்கள் 5-ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகையை 20 மாத தவணையில் செலுத்தவும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
5G சேவை மூலம் நவீன வணிகங்கள் உருவாக்குவதற்கும், நிறுவனங்களுக்கு கூடுதல் வருவாயை உருவாக்குவதற்கும், புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் சாத்தியம் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
Tags: News