அவசர சட்டம் செல்லுபடியாகும் - முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு
Posted on 20/01/2017
"ஜல்லிக்கட்டுக்காக, தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் செல்லுபடியாகும்" என, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தன், ‛பேஸ்புக்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சில மணி நேரத்திற்கு முன், ‛டிவி' சேனல் விவாதம் ஒன்றை பார்த்தேன். அதில் பேசியவர்கள், ‛ உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டத்தை எப்படி கொண்டு வர முடியும்' என,கேள்வி எழுப்பி இருந்தனர். எனவே, இந்த விஷயத்தில் சட்ட நிலையை நான் விளக்க உள்ளேன். ஒரு சட்டம் அல்லது அவசர சட்டம் (இரண்டும் ஒரே மாதியான சட்ட அங்கீகாரம் பெற்றவை தான். சட்டசபை அல்லது பார்லிமென்ட் கூட்டம் நடக்காத போது கொண்டு வரப்படுவது தான் அவசர சட்டம் என்ற ஒரே வித்தியாசம் தான் உள்ளது) நேரடியாக, நீதிமன்ற தீர்ப்பை செல்லாது என்று சொல்லாது.
எனினும், ஒரு சட்டம் அல்லது அவசர சட்டம், மூலம் நீதிமன்றம் எந்த சட்டத்தை அடிப்படையாக வைத்து முடிவை எடுத்ததோ அந்த சட்டத்தை திருத்தவோ, செல்லாதபடியாக்கவோ முடியும். ஜல்லிக்கட்டு தொடர்பாக, ஜனாதிபதி பிறப்பிக்க உள்ள அவசர சட்டம், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நேரடியாக செல்லாது என்று கூறாது.
Tags: News, Madurai News, Art and Culture