ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி!
Posted on 14/02/2017
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வர் பதவியில் இருந்து தாம் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார். அத்துடன் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தமக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆளுநரிடம் முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.
சசிகலாவோ தமக்கே அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருக்கிறது, என்னை முதல்வராக்குங்கள் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த சசிகலா ஆளுநரை மிரட்டும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிவந்தார்.
இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது. இதனால் அவரது முதல்வர் பதவி கனவு தகர்ந்தது. இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதேநேரத்தில் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார்.
தாம் அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஃபேக்ஸ் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை தரவும் தயார் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
இதை ஏற்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநர் வித்யாசாகர் ராவை மாலை 5.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பார். இந்த சந்திப்பின் போது தமக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை கொடுத்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி.
Tags: News, Madurai News