இவனுகள நம்பலாமா வேணாமா-னே தெரியலையே கடவுளே!
Posted on 12/09/2017
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சி போராட்டம் நடைபெற்றது. நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போனதால் அரியலூர் மாணவி அனிதா அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் போது, மாணவி அனிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல் திருச்சி, திருவண்ணாமலை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெறும் போராட்டத்தில் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். புதுச்சேரியில் தலைமை தபால் நிலையம் அருகே முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags: News, Madurai News