கொரோனா தடுப்பூசி வினியோகம் - மோடிக்கு பைடன் பாராட்டு!
Posted on 24/05/2022
கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தியது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
க்வாட் மாநாட்டை ஒட்டி ஜப்பானில் நடைபெற்ற சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் ஜோ பைடன் நேரில் பாராட்டினார். இதுபோன்ற மிகப் பெரிய முன்னெடுப்பை ஜனநாயக ரீதியிலும் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்பதை இந்தியா உலகிற்கு உணர்த்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி மிகுந்த நேரங்களில் சீனா, ரஷ்யா போன்ற சர்வாதிகார நாடுகளால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும் எனும் தவறான பிம்பத்தை பிரதமர் மோடி உடைத்திருப்பதாக புகழ்ந்த ஜோ பைடன், இந்த விவகாரத்தில் சீனா தோல்வி அடைந்துள்ளதாகவும் விமர்சித்தார்.
கொரோனா தடுப்பூசியை இந்தியா, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது சர்வதேச பாராட்டை பெற்றதாகத் தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், பல்வேறு யோசனைகள் குறித்து விவாதிப்பதைவிட இதுபோன்று உதவுவது ஒப்பீட்டளவில் மிகப் பெரியது என குறிப்பிட்டார்.
இந்தியாவின் கொரோனா தடுப்பசி ஏற்றுமதிக்கு ஜப்பான் பிரதமர் கிஷிடாவும் பாராட்டு தெரிவித்தார். க்வாட் நாடுகளின் கொரோனா தடுப்பூசி வினியோக திட்டத்தின் கீழ் இந்திய தடுப்பூசிகள் தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் ஏற்றுதி செய்யப்பட்டதையும் அந்த நாடுகள் நன்றியுடன் பெற்றுக்கொண்டதையும் நினைவுகூற விரும்புவதாக கிஷேிடா தெரிவித்தார்.
Tags: News