இளைஞர்களின் புரட்சியை கொச்சைப்படுத்திய ராதாராஜன் மீது வழக்கு!
Posted on 21/01/2017
ஜல்லிக்கட்டு புரட்சியில் குதித்த இளைஞர் படையை ப்ரீ செக்ஸை முன்வைத்து விமர்சித்த பீட்டா ஆதரவாளரும் நாய் ஆர்வலருமான ராதாராஜன் மீது சென்னை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரம் ஆண்டுகால தமிழினத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தற்கு காரணமே பீட்டா என்ற அமெரிக்கா தொண்டு நிறுவனம்தான். தமிழினத்தின் வீதிகள் தோறும் போராடும் இளைஞர்களின் முதன்மை கோரிக்கைகளில் ஒன்று பீட்டாவை தடை செய் என்பதுதான்.
இப்படி லட்சோப லட்சம் இளைஞர்கள் உரிமை புரட்சியில் குதித்ததை ஆபாசமாக கொச்சைப்படுத்தியிருந்தார் பீட்டா ஆதரவாளர் ராதாராஜன். லண்டன் பிபிசி தமிழோசை வானொலிக்கு ராதாராஜன் அளித்த பேட்டியில், ப்ரீ செக்ஸ் டாபிக்கில் டிஸ்கசன் வைத்தால் 50,000 பேர் வருவாங்கதானே அதைப் போன்றதுதான் ஜல்லிக்கட்டு புரட்சியில் குதித்தவர்கள் என விமர்சித்திருந்தார். அவரது இந்த விமர்சனம் ஒட்டுமொத்தமாக தமிழகத்தை கொந்தளிக்க வைத்துவிட்டது. சமூக வலைதளங்களில் ராதாராஜன் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே சென்னை போலீஸ் கமிஷ்னரிடத்தில் சென்னையை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் இன்று ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் மெரினாவில் போராடுபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் ராதாராஜன் இழிவாக பேசியுள்ளார். பெண்களை ஆபாசமாக பேசுதல், பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளில் ராதாராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags: News, Madurai News, Lifestyle, Art and Culture