இன்று நாடு முழுவதும் இன்று குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்!
Posted on 14/11/2016
இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளிடம் மிகவும் அன்பு செலுத்தும் இவரை, எல்லாக்குழந்தைகளும் நேரு மாமா என்றே அழைக்கின்றனர். அதனால் இவர் குழந்தைகள் மீது வைத்திருந்த அன்பை போற்றும் விதமாக இவரது பிறந்தநாளான நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
நேரு பிரதமராக இருந்த போது நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். மேலும் பணியின் போது குழந்தைகளை சந்தித்து உரையாடுவதை ஜவஹர்லால் நேரு அவர்கள் வழக்கமாக கொண்டிருந்தார்.
குழந்தைகள் நம் நாட்டின் எதிர்கால நம்பிக்கைகள். அதனால் அவர்களிடம் நல் உறவை வளர்த்துக்கொண்டு, அவர்களை நல்வழிப்படுத்தி வளர்க்க வேண்டியது அனைவரின் பொறுப்பு. இதனை அனைவரும் அவர்களின் வீடுகளில் இருந்து தொடங்கவேண்டும். பரபரப்பான சூழலுக்கு நடுவே குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு அவர்களை புரிந்து கொண்டு, விருப்பங்களை நிறைவேற்ற வேண்டியது மிகவும் முக்கியம்.
பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடைவெளி அதிகரித்துவிட்டது, அதே போல் ஆசிரியர்களுக்கும், குழந்தைகளுக்குமான நெருக்கம் குறைந்துவிட்டது. இவை எல்லாவற்றையும் சரிசெய்து குழந்தைகளுடன் சுமூகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு என்று ஒரு உலகம் இருக்கிறது. அதனை புரிந்து கொண்டு அவர்களின் உலகத்திற்குள் சென்று அவர்களை வழிநடத்த வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் எல்லாக்குழந்தைகளும் சிறந்த குழந்தையாக வளரும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டியது முக்கியமான ஒன்று.
நாளைய தலைவர்களான குழந்தைகளின் லட்சியங்களை கேட்டறிந்து அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதே ஒவ்வொருவரின் கடமை. நேருவின் நினைவாக நாடுமுழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags: News, Art and Culture