6.5 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகமான கடனை வங்கிகள் மீட்டுள்ளன
Posted on 15/03/2022
கடந்த ஆறரை ஆண்டுகளில் ரூ.7.34 லட்சம் கோடி கடனை வங்கிகள் வசூலித்துள்ளன என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வங்கி மோசடி, வாராக்கடன் உள்ளிட்ட விவரங்கள் குறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் பாக்வத் காரத் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
கடந்த 6.5 ஆண்டுகளில் வாராக்கடன், தள்ளுபடிக்கடன், மோசடியில் ஈடுபட்டவை ஆகியவை என வங்கிகள் ரூ.7 லட்சத்து 34 ஆயிரத்து 542 கோடி கடன் தொகையை மீட்டுள்ளன. இதில் நடப்பு நிதியாண்டில் 2021, டிசம்பர் மாதம் வரை ரூ.55ஆயிரத்து 895 கோடி கடன் வசூலி்க்கப்பட்டுள்ளது.
ரிசர்வ்வங்கி கடந்த 2016ம்ஆண்டு அளித்த கடினமான வழிகாட்டல்கள், கட்டுப்பாடுகள், அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் ஆகியவை மூலம் வங்கி மோசடிகள் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2015-16ம் ஆண்டில் ரூ.68ஆயிரத்து 962 கோடியாக இருந்த வங்கி மோசடி, 2020-21ம் ஆண்டில் ரூ.11ஆயிரத்து 583 கோடியாக குறைந்துள்ளது. 2021-22ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ரூ.648 கோடி அளவுக்கு வங்கிமோசடி நடந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக கோடக் மகிந்திரா வங்கியில் ரூ.ஒரு லட்சம் அதற்கும் அதிகமாக 642 மோசடிகள் நடந்துள்ளன. அதைத்தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கியில் 518 மோசடிகள், இன்டஸ்இன்ட் வங்கியில் 317 மோசடிகள் நடந்துள்ளன
அதிலும் கோடக் மகிந்திரா வங்கியில் வங்கி மோசடி தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 2017ம் ஆண்டில் 135 ஆக இருந்த மோசடி 2021ல் 826ஆக அதிகரித்திருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் வங்கி மோசடி 642 ஆக அதிகரித்துள்ளது. ஆக்சிஸ் வங்கியில் 235 மோசடிகள், எஸ்பிஐ வங்கியில் 159 மோசடிகள், ஹெட்சிஎப்சி வங்கியில் 151 மோசடிகள் நடந்துள்ளன.
Tags: News